No. 325, Bauddhaloka Mawatha, Colombo 07 | Tel : 0112693272 | Fax: 0112693271
இளம் ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்சார் பயிற்சிப்பட்டறை
2026 ஜனவரி 30ஆம் தேதி, இலங்கை பத்திரிகை பேரவையின் (Sri Lanka Press Council) ஏற்பாட்டில் இளம் ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்சார் பயிற்சிப்பட்டறை நடைபெற்றது. இதில் உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள் சுமார் 50 பேர் வரை கலந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வின் முக்கிய உரையை பிலிப்பைன்சைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் PEN International அமைப்பின் செயற்குழு உறுப்பினரான திரு. அமாடோ அஞ்சலோ சார்ஜ் ரொட்ரிகஸ் லாகுவெஸ்டா அவர்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியின் போது, ஊடகவியலில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் அடிப்படை கோட்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொழில்நுட்பப் பிழைகளை குறைப்பதும், பொதுக் கலாசாரத்திற்கு நேர்மறைப் பங்களிப்பு அளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவை பயனுள்ளதாகப் பயன்படுத்துவதும் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
இந்த பயிற்சிப்பட்டறை பல கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக அமைந்த இம்முதல் பயிற்சிப்பட்டறையில், பங்கேற்பாளர்களுக்கு பல்வேறு தலைப்புகள் குறித்த ஆழமான அறிவு வழங்கப்பட்டது. அதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய அபாயங்களும் பொறுப்பற்ற பயன்பாடும், மனித உறவுகளை வடிவமைப்பதில் அதன் மூலோபாய முக்கியத்துவம், செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் கட்டமைப்பு மாதிரிகள் மற்றும் மாற்றங்கள், வாழ்வியல் முறைகளில் அதன் தாக்கம், உளவியல் விளைவுகள், அரசியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கு இடையிலான தொடர்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இடம்பெற்றன.
நிகழ்வின் ஆரம்பத்தில் உரையாற்றிய இலங்கை பத்திரிகை பேரவையின் தலைவர் திரு. பிரியன் ஆர். விஜேபண்டார அவர்கள், இலங்கையின் இளம் ஊடகவியலாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடும் அதன் தாக்கங்களும் குறித்து கல்வித் தரமான அறிவை வழங்குவதே இப்பயிற்சிப்பட்டறையின் பிரதான நோக்கம் எனத் தெரிவித்தார்.
இதனிடையே, ஆசிய ஊடக மற்றும் பண்பாட்டு சங்கத்தின் (AMCA) பொதுச் செயலாளர் திரு. நிஷாந்த ஆல்விஸ் அவர்கள், நவீன சமூக–பண்பாட்டு போக்குகளை வடிவமைக்கும் மிக முக்கியமான கருவிகளில் ஒன்றாக செயற்கை நுண்ணறிவு மாறியுள்ளதாகக் குறிப்பிட்டார். அதன் கட்டமைப்புச் சார்ந்த பயன்பாடுகள் மிகுந்த கவனத்துடனும் பொறுப்புடனும் கையாளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், இலங்கை ஊடகத்துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருப்பதாகவும், சமூக ஊடக தளங்களை முறையாக நிர்வகிப்பதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
இந்த பயிற்சிப்பட்டறையை ‘Kangaroo Post' பத்திரிகையின் ஆசிரியரும், ஆசிய ஊடக மற்றும் பண்பாட்டு சங்கத்தின் (AMCA) சர்வதேச செயலாளருமான திரு. பாதும் விக்ரமரத்ன அவர்கள் வழிநடத்தினார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய சவால்களை அடையாளம் காண்பதும், நடைமுறைத் தீர்வுகளை கண்டறிவது தொடர்பான கலந்துரையாடல்களை அவர் முன்னெடுத்து, பங்கேற்ற ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார்.
இந்த பயிற்சிப்பட்டறையில் இலங்கை பத்திரிகை பேரவையின், ஆசிய ஊடக மற்றும் பண்பாட்டு சங்கம் (AMCA), ஐக்கிய இராச்சியத்தின் PEN International மற்றும் ஆஸ்திரேலிய பத்திரிகையான ‘Kangaroo Post’ ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துக் கொண்டனர். அவர்களில், இலங்கை பத்திரிகை பேரவையின் தலைவர் திரு. பிரியன் ஆர். விஜேபண்டார, பத்திரிகை ஆணையாளர் திரு. நிரோஷன தம்பவிட்ட, AMCA தலைவர் திரு. பாதும் பஸ்குவல், AMCA பொதுச் செயலாளர் திரு. நிஷாந்த ஆல்விஸ், லேக் ஹவுஸ் நிறுவனத்தின் இயக்குநரும் ஆசிரியர் குழு உறுப்பினருமான திரு. சிசிர யாப்பா, மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கழகத்தின் செய்தி உதவி இயக்குநர் திரு. குமுது வாஜிர ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
https://www.slpc.lk/tamil/services-tamil/workshops/media-workshops/ai-worksop-ta#sigProId03dce9fa4f

